3 சவரன் கூடுதலாக வரதட்சணை கேட்டு திருமணம் நிறுத்தம் மாப்பிள்ளை உட்பட 6 பேர் மீது வழக்கு வந்தவாசி அருகே நிச்சயம் முடிந்த நிலையில்
வந்தவாசி, நவ. 18: வந்தவாசி அருகே நிச்சயம் முடிந்த நிலையில் 3 சவரன் கூடுதலாக வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தை சேர்ந்த கண்ணையா மகன் துரை காசிநாதன்(29). இவர் வந்தவாசி பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே உள்ள பத்திர எழுத்தர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தெள்ளார் ஒன்றியத்தைச் சேர்ந்த சத்துணவு பெண் அமைப்பாளரின் 22 வயது மகளுக்கும் கடந்த மாதம் 3ம் தேதி தெள்ளாரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது வருகின்ற 27ம் தேதி திருமணம் நடக்க உறவினர்கள் முடிவு செய்தனர்.
நிச்சயதார்த்தத்தின்போது 7 சவரன் நகை போடுவதாக பெண் வீட்டார் சார்பில் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. துரை காசிநாதன் பெற்றோர் சிறுவயதிலேயே மறைந்து விட்டதால் இவரது சித்தி எல்லம்மாள் மகன் தனசேகர்(44) பராமரிப்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது காசிநாதனுக்கு நிச்சயம் செய்த பெண் வீட்டாரிடம் கூடுதலாக 3 சவரன் என மொத்தம் 10 சவரன் நகை பெண்ணிற்கு வழங்கினால் தான் திருமணம் செய்து கொள்வோம் என துரை காசிநாதன் அவரது உறவினர்களான தனசேகர், காளி, பால்ராஜ், சுமதி, மஞ்சுளா ஆகியோர் ஒன்று சேர்ந்து நகை கொடுத்தால் தான் திருமணம் நடத்துவோம் என நேற்றுமுன்தினம் கூறி திருமணத்தை நிறுத்தி விட்டார்களாம்.
இதனால் வேதனை அடைந்த பெண்ணின் தாய் மகளிர் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்குப்பதிவு செய்து பத்திர எழுத்தர் உதவியாளர் உள்ளிட்ட 6 நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தங்கம் விலை உச்சத்தை தொட்ட நிலையில் 3 சவரன் நகைக்காக திருமணத்தை நிறுத்திய சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.