மான் வேட்டையாடியவர் கைது சாத்தனூர் வனப்பகுதியில்
தண்டராம்பட்டு, செப்.11: சாத்தனூர் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய நபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சொர்ப்பனந்தல் மேற்கு பீட் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் மான் வேட்டை நடப்பதாக மாவட்ட வன அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சாத்தனூர் அணை வனச்சரக அலுவலர் தமிழரசன், வனவர்கள் குமார், சிவக்குமார், வனக்காப்பாளர்கள் ராம்குமார், சிலம்பரசன், கார்த்திக், வீரச்செல்வன், இந்திரகுமார் தலைமையில் வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை சந்தேகத்தின்பேரில் மடக்கி சோதனை செய்தனர். அதில், மானை வேட்டையாடி இறைச்சியை பிளாஸ்டிக் கவரில் மூட்டை கட்டிக்கொண்டு செல்வது தெரியவந்தது. மேலும், மான் வேட்டையாடியவர் புதுப்பாளையம் அடுத்த வீரானந்தல் கிராமத்தை சேர்ந்த பெருமாள்(45) என்பது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர், மான் இறைச்சி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து பெருமாளை கைது செய்தனர். பின்னர், அவரை தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவண்ணாமலை சிறையில் அடைத்தனர்.