காய்ச்சலால் 2வயது குழந்தை பலி சேத்துப்பட்டு அருகே
சேத்துப்பட்டு, நவ. 8: சேத்துப்பட்டு அருகே காய்ச்சலால் 2வயது குழந்தை உயிரிழந்தது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த மேல் வில்லிவனம் சாமந்திபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர்(32) கூலி தொழிலாளி. இவரது மனைவி மீனா. இவர்களுக்கு ரித்திகா(4), ஜெயா(3), தினநாதன்(2) என 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி மாலை மகன் தினநாதனுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி குழந்தை நல மருத்துவர் கூறியுள்ளார். திருவண்ணாமலை மருத்துவமனையில் குழந்தை தினநாதனை பரிசோதித்த டாக்டர் குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் குழந்தையின் சடலத்தை பிணவறையில் வைத்தனர். இதுகுறித்து ராஜசேகர் சேத்துப்பட்டு போலீசில் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சப்- இன்ஸ்பெக்டர் சிவகுமார் நேற்றுமுன்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் இறப்புக்கு காரணம் நிமோனியா காய்ச்சலாக இருக்கக்கூடும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.