கூலிப்படை ஏவி விவசாயி ஓடஓட சரமாரி வெட்டிக்கொலை * உறவினர் உட்பட 2 பேர் கைது * தனிப்படை பெங்களூரு விரைவு பொன்னை அருகே நிலத்தகராறில் பயங்கரம்
பொன்னை, ஆக.6: பொன்னை அருகே நிலத்தகராறில் கூலிப்படை ஏவி விவசாயி ஓடஓட சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக உறவினர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கூலிப்படையை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த எஸ்.என்.பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடரமணன்(48). விவசாயியான இவருக்கு திருமணமாகவில்லை. இவர், பொன்னை ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒப்பந்த ஆபரேட்டராக பணியாற்றினார். இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய் மற்றும் பாட்டியுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை நிலத்திற்கு சென்று வெங்கட்ரமணன், தண்ணீர் பாய்ச்சிவிட்டு கொட்டகையில் படுத்திருந்தபோது, அங்கு வந்த 2 மர்ம நபர்கள் வெங்கடரமணனை கத்தியால் வெட்டினர்.
அவர்களிடம் இருந்து தப்பியோடிய வெங்கட்ரமணனை ஓடஓட சரமாரி வெட்டியதில் சிறிது தூரத்தில் வயல்வெளியில் மயங்கி விழுந்தார். ரத்த வெள்ளத்தில் போராடிய வெங்கட்ரமணனை அப்பகுதி மக்கள் மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பொன்னை இன்ஸ்பெக்டர் கருணா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் டேங்க் ஆபரேட்டர் வெங்கட்ரமணன், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் கருணா, பிரம்மபுரம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, காட்பாடி இன்ஸ்பெக்டர் தயாளன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் விசாரணையில், கடந்த மாதம் 2 மர்மநபர்கள் சந்தேகப்படும்படி அவரை பின்தொடர்வதாக ஊர்மக்களிடம் பிடித்து கொடுத்ததும், திடீரென இருவரும் தப்பிச் சென்றதும் தெரியவந்தது. அதில் ஒருவர் பி.என்.பாளையத்தை சேர்ந்த சாந்தகுமார்(48) என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் கொலை சம்பவம் நடந்த பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் பதிவான செல்போன் சிக்னல்களை சேகரித்து சைபர் கிரைம் உதவியுடன் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சாந்தகுமார், கொலை செய்யப்பட்ட வெங்கட்ரமணனின் பெரியப்பா மகனான சின்னப்பரெட்டி(52) என்பவரிடம் அடிக்கடி பேசி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எஸ்.என்.பாளையத்தை சேர்ந்த சின்னப்பரெட்டி தற்போது குடும்பத்துடன் திருப்பதியில் வசித்து வரும் நிலையில், அவரையும், சாந்தகுமாரையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்து இருவரையும் நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்கள் அளித்த பரபரப்பு வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில், ‘கொலை செய்யப்பட்ட வெங்கட்ரமணனுக்கும், அவரது பெரியப்பா மகனான சின்னப்பரெட்டிக்கும் 15 சென்ட் நிலம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் அருகிலுள்ள பி.என்.பாளையம் கிராமத்தை சேர்ந்த சாந்தகுமாரை அணுகிய சின்னப்பரெட்டி, வெங்கட்ரமணனை தீர்த்துக்கட்டினால், பணம் கொடுப்பதாக கூறி உள்ளார். அதன்படி சாந்தகுமார் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கூலிப்படையை சேர்ந்தவர்களை அழைத்து வந்து வெங்கட்ரமணனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். ஆனால் நோட்டமிட்டு, கடந்த மாதம் பொதுமக்களிடம் சிக்கிய நிலையில், கூலிப்படையை சேர்ந்தவரை அழைத்துக்கொண்டு சாந்தகுமார் தப்பி ஓடி உள்ளார். தொடர்ந்து நேற்று முன்தினம் காலை வெங்கட்ரமணனை பின்தொடர்ந்து சென்று வெட்டி கொலை செய்துள்ளனர்’ என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து கூலிப்படையை சேர்ந்த இருவரை பிடிக்க 2 தனிப்படை போலீசார் பெங்களூருவுக்கு விரைந்துள்ளனர்.