கட்டுமான பொருள் விநியோகிஸ்தரின் வங்கி கணக்கில் ரூ.85 ஆயிரம் பணம் திருட்டு
திருப்பூர், நவ.22: திருப்பூர் பூலுவபட்டி தோட்டத்துப்பாளையம் மகாவிஷ்ணு நகரை சேர்ந்த கட்டிட கட்டுமானத்துக்கு தேவையான பொருட்களை விநியோகிக்கும் பூபதி (46), என்பவர், திருப்பூர் சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர், பெருமாநல்லூர் சாலை புதிய பேருந்து நிலையம் பகுதியில் வங்கி ஒன்றில் கணக்கு வைத்திருந்தேன்.
வங்கி கணக்கில் இருந்து கடந்த அக். மாதம் 16ம் தேதி யுபிஐ பேமெண்ட் பியூச்சர் ஜெனரல்யா லைப் இன்சூரன்ஸ் என்ற பெயரில் ரூ.85 ஆயிரம் என்னுடை வங்கிக் கணக்கிலிருந்து பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தது. நான் அந்த நிறுவனத்தில் எவ்விதமான காப்பீடும் சேரவில்லை. இது தொடர்பாக யாரும் என்னை தொடர்பு கொள்ளவும் இல்லை.
ஆனால், என்னுடைய அனுமதியின்றி வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த நவ. 16ம் தேதி தேதி அறிந்தேன். இது தொடர்பாக கோவையில் உள்ள காப்பீடு நிறுவனத்துக்கு சென்று விசாரிக்க சென்றபோது அது மூடியிருந்தது. திருச்சியில் மட்டும் அலுவலகம் செயல்படுவதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், திருப்பூரில் உள்ள வங்கிக்கிளைக்கு சென்று விசாரித்தபோது, இந்தபணம் யாருக்கு சென்றது என்பதை கண்டறிய முடியவில்லை என தெரிவித்து விட்டனர். இது தொடர்பாக விசாரித்து சம்பந்தப்பட்ட மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனது பணம் திரும்ப கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.