காங்கயம் அருகே மண் அள்ளிய லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்
காங்கயம், நவ. 21: காங்கயம் தாலுகா, ஊதியூர் ஆறுதொழுவு பஞ்சாயத்துக்கு உட்பட்ட காளிபாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு நேற்று காலை சிலர் சட்டவிரோதமாக மண் அள்ளினர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மண் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்தனர். தொடர்ந்து காவல்துறைக்கும், ஊதியூர் வருவாய்த்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ஊதியூர் இன்ஸ்பெக்டர் சரோஜா, ஆறுதொழுவு கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் பிடித்து வைக்கப்பட்ட லாரியை சோதனை செய்ததில் மண் அள்ளுவதற்கான எவ்வித உரிமம் இல்லை. பின்பு லாரியில் இருந்த மண்ணை மீண்டும் எடுத்த பகுதியில் கொட்டுமாறு அறிவுறுத்தினர். விவசாய நிலத்தில் எவ்வித அனுமதி இல்லாமல் மண் எடுப்பது குற்றமென தெரிவித்தனர்.
இடத்தின் உரிமையாளர் மீது ஏற்கனவே மண் அள்ளிய வழக்கு மாவட்ட கனிமம் தனி வருவாய் (புவியியல்) மற்றும் சுரங்க துறையில் நிலுவையில் உள்ளது. இதற்கு நிலம் அளவீடு செய்யப்பட்டு அபராதம் விதிக்கபட உள்ள நிலையில் இந்த முறை மண் அள்ளியதற்கும் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.