திருப்பூரில் இன்று மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி
திருப்பூர், ஆக.7: கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ் கனவு என்ற பெயரில் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் 2022-23 மற்றும் 2023-24 கல்வி ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 2000 கல்லூரிகளைச் சேர்ந்த 2 லட்சம் மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் 200 இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டது.
உயர்கல்வி துறையுடன் தமிழ் இணைய கல்விக்கழகம் இணைந்து இந்நிகழ்ச்சிகளை நடத்தியது. தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் செழுமையும் சமூக சமத்துவத்தையும் பொருளாதாரம் மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையிடையே குறிப்பாக கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசு இந்த பரப்புரை திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இதன் ஒரு நிகழ்வாக இன்று திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் சசூரி காலை அறிவியல் கல்லூரியில் செம்மொழியான தமிழ் மொழி என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் பாரதி கிருஷ்ணகுமார் சொற்பொழிவு ஆற்ற உள்ளார். இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழ் பெருமிதம் ஆகிய இரு கையேடுகள் வழங்கப்பட உள்ளது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட கலெக்டர் மனிஷ் தெரிவித்துள்ளார்.