வலி நிவாரணி மாத்திரைகளை போதை பயன்பாட்டிற்கு விற்ற வாலிபர் கைது
திருப்பூர், நவ.1: திருப்பூர் நல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் நல்லூர் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, முதலிபாளையம் பிரிவில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
போலீசார் விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். தொடர்ந்து விசாரணையில் அவர் திருப்பூர், லட்சுமி நகர் முதல் வீதியை சேர்ந்த சரவணன் (34) என்பதும், அவர் அப்பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனைக்கு எடுத்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 30 வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.