தென்காசியில் வியாபாரி மீது பைக் மோதல்
தென்காசி, செப். 27: தென்காசியில் வியாபாரி மீது பைக் மோதிய வழக்கில் உரிமையாளர் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தென்காசி கீழப்புலியூர் புலிக்குட்டி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது மகன் அலி ஷேக் மன்சூர் ( 68 ). இவர் தென்காசி தினசரி சந்தை எதிரில் பலசரக்குகடை வைத்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இரவு அவரது கடையிலிருந்து தென்காசி வாய்க்கால் பாலம் இசக்கி மஹால் அருகே உள்ள கடையில் டீ குடிப்பதற்காக பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் பைக்கில் வேகமாக வந்த பைக் மோதியதில் அலி ஷேக் மன்சூர் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து மோதிவிட்டு பைக்கில் நிற்காமல் சென்ற நபரை சிசிடிவி காட்சி பதிவுகள் மூலம் தேடி வந்தனர். இந்நிலையில் பைக்கில் வந்து மோதிய நபர்கள் 18 வயதுக்குள் குறைந்த இளம் சிறார்கள் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பைக்கின் உரிமையாளரான ஆசிரியர் அகமதுஷா (58) என்பவர் மீது தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.