கார்த்திகை 2வது சோமவார திருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி கோயிலில் 1008 பால்குடம் ஊர்வலம்
கோவில்பட்டி, நவ. 25: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் கார்த்திகை 2வது சோமவார திருவிழாவை முன்னிட்டு 1008 பால்குடம் ஊர்வலத்தை கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார். கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் யோகீஸ்வரர் உறவின்முறை சங்கம் சார்பில் 83ம் ஆண்டு கார்த்திகை 2வது சோமவார மண்டகப்படி திருவிழாவை முன்னிட்டு 1008 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. யோகீஸ்வரர் உறவின்முறை சங்க தலைவர் கோமதிராஜ் தலைமை வகித்தார். சங்க செயலாளர் வெயில்முத்து, பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கலந்து கொண்டு 1008 பால்குடம் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
பால்குடம் ஊர்வலம் பாரதி நகர் சிவயோகி வலம்புரி விநாயகர் கோயிலில் இருந்து புறப்பட்டு பசுவந்தனை ரோடு, எட்டயபுரம் ரோடு வழியாக சென்று செண்பகவல்லி அம்மன் கோயிலை வந்தடைந்தது. பின்னர் செண்பகவல்லி அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், அணி மாவட்ட செயலாளர்கள் பாசறை கவியரசன், மகளிரணி பத்மாவதி கனகசுந்தரம், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் போடுசாமி, வர்த்தக அணி மாவட்ட இணை செயலாளர் விஜயராஜ், வர்த்தக அணி நகர செயலாளர் பூக்கடை ஆனந்த், ஜெ. பேரவை மாவட்ட இணை செயலாளர் ஜயப்பன், கலைப்பிரிவு மாவட்ட இணை செயலாளர் செல்வ பாலாஜி, ஆவின் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.