சந்தையடியூர் தசரா குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
கேடிசி நகர், செப். 25:மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடியால் பரபரப்பு ஏற்பட்டது. மேலப்பாளையம் கொட்டிக்குளம் பஜார் செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கார்த்திக் (27). இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இதனால் சங்கரன்கோவில் பகுதிக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருடன் கார்த்திக்குக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மாணவியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி நெல்லை சந்திப்பு குறுக்குத்துறையில் உள்ள ஒரு கோவிலில் நேற்று திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் இருவரும் பாதுகாப்பு கேட்டு மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி இருவரது பெற்றோரையும் வரவழைத்தனர். ஆனால் மாணவியின் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்கவில்லை. இதனிடையே மாணவி திருமண வயதை எட்டி விட்டதால் அவரை போலீசார் காதலன் கார்த்திக்குடன் அனுப்பி வைத்தனர். காதல் ஜோடி தஞ்சம் புகுந்ததால் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.