தென்காசியில் கரும்புச்சாறு இயந்திரத்தில் பெண்ணின் கை சிக்கியதால் பரபரப்பு
தென்காசி,ஆக.13:தென்காசி அடுத்த ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் பத்மினி (32). இவர் தென்காசி அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தற்போது வசித்து வருகிறார். தென்காசி-மதுரை சாலையில் சாலையோரம் கரும்புச்சாறு இயந்திரம் வைத்து விற்பனை செய்து வருகிறார். நேற்று காலையில் கரும்புச்சாறு இயந்திரத்தை சுத்தம் செய்த போது தவறுதலாக கை உள்ளங்கை வரை இயந்திரத்தில் சிக்கிவிட்டது. வலியினால் துடித்த அவரை பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தென்காசி தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் பிரதீப் குமார் மற்றும் சிறப்பு அலுவலர் கணேசன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெல்டிங் இயந்திரத்தை வைத்து கரும்புச்சாறு இயந்திரத்தை வெட்டி எடுத்து பெண்ணின் கையை மீட்டனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.