சாலை விபத்தில் மரணமடைந்த நெல்லை திமுக உறுப்பினர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
சென்னை, நவ.6: சாலை விபத்தில் மரணமடைந்த திமுக உறுப்பினர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: மதுரையில் 1.6.2025 அன்று நடந்த தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘திமுக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்த குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் பத்து லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்த பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும்’ என்று அறிவித்திருந்தார்.
அந்த வகையில், விபத்தில் மரணமடைந்த திண்டிவனம், இறையனூரைச் சேர்ந்த சரிதா-ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த க.முத்தமிழ்செல்வன்-ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வே.சரவணன் - திருவாரூர் மாவட்டத்தைச் எம்.விக்னேஷ் - கடலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த குப்புசாமி - காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ.ராம்பிரசாத் - நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கு.சரண்ராஜ் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பிரகாசம் ஆகிய 8 குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கியதை தொடர்ந்து நெல்லை மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக உறுப்பினரான பி.மேகலிங்கம், கேரள மாநிலம், கோனி சென்ட்ரல் ஜங்ஷன் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மேகலிங்கம் குடும்ப நிவாரண நிதியாக, ரூ.10 லட்சத்திற்கான காசோலையை, முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேகலிங்கத்தின் மனைவி செல்வியிடம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் வழங்கினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.