ஆலங்குளம் அருகே பள்ளியில் ரூ.36 லட்சத்தில் புதிய வகுப்பறை
ஆலங்குளம்,ஆக.6: ஆலங்குளம் அருகே பூலாங்குளம் பஞ்சாயத்து அழகாபுரி பாபநாசபுரத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இப்பள்ளியில் வகுப்பறை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மேலாண்மை குழு தலைவர் ஆகியோர் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏவை சந்தித்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய 2 வகுப்பறை கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையேற்று எம்எல்ஏ அப்பள்ளிக்கு (CFSIDS) குழந்தைகள் நட்பு பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.36 லட்சம் நிதியை பெற்று கொடுத்தார்.
இதைதொடர்ந்து புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சொர்ண செலினா தலைமை வகித்தார். ஊர் தலைவர் செல்லப்பா, ஓபிஎஸ் அணி மாநில அமைப்பு செயலாளர் ராதா, மாவட்ட செயலாளர் கணபதி, மாவட்ட பொருளாளர் நூருல் அமீர், அஞ்சான்கட்டளை பஞ்சாய த்து தலைவர் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் பாலையா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சக்தி வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பேசினார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் முருகன், ஓபிஎஸ் அணி கனக பிரசாத், கணேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். உதவி ஆசிரியை ரேகா நன்றி கூறினார்.