மானூர் அருகே பாலத்தில் அமர்ந்து மது அருந்திய தொழிலாளி தவறி விழுந்து பலி
நெல்லை, ஆக. 18: மானூர் அருகேயுள்ள தென்கலம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (55). கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள சிறுபாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர் அவர், வீட்டிற்குத் திரும்பவில்லை எனத் தெரிகிறது. நேற்று காலை, அந்த வழியாக சென்ற பொதுமக்கள், பாலத்தில் இருந்து விழுந்து மாரியப்பன் அசைவற்று கிடப்பதை பார்த்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பாலத்தின் சுவரில் அமர்ந்து மது அருந்தியபோது, போதையில் நிலைதடுமாறி மாரியப்பன் கீழே விழுந்து இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், உடற்கூராய்வு அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.