வீட்டுத்தோட்டம் அமைக்கும் வழிமுறைகள் தோட்டக்கலைத்துறையினர் டிப்ஸ்
தேனி, ஜூலை 4: பொதுமக்கள் வீட்டுத்தோட்டம் அமைக்க கடைப்பிடிக்க ேவண்டிய வழிமுறைகள் குறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது: வீட்டில் தோட்டம் அமைக்கும் இடத்தில் போதிய அளவில் சூரிய ஒளி இருக்க வேண்டும். வெண்டை, கொத்தவரை, முள்ளங்கி போன்ற காய்கறி விதைகளை நேரடியாக விதைக்க வேண்டும் விதையின் அளவை விட இரண்டரை மடங்கு ஆழத்தில் (சுமாராக 5 முதல் 6 மிமீ) விதைகளை ஊன்ற வேண்டும். கீரை வகைகளின் விதைகள் மிகச்சிறியதாக இருப்பதால், ஒரு பங்கு விதையுடன் இரண்டு பங்கு மணல் அல்லது நுண்ணுயிர் உரத்தை கலந்து தூவ வேண்டும்.
மண்ணின் ஈரத்தன்மை அடிப்படையில், வாரத்திற்கு ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். செடிகளுக்கு வாரம் ஒருமுறை உரமிட்டால் அதன் வேர்கள் நன்றாக வளரும். தொழு உரம் அல்லது மண்புழு உரம் (கைப்படி அளவு அல்லது 100 கிராம்) போன்றவை மற்றும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போபாக்டீரியா 10 கிராம் போன்றவற்றை இடுவதால் செடிகள் நன்கு வளர்ந்து நல்ல மகசூல் கொடுக்கும்.
தக்காளி, கத்தரி, கொத்தவரை ஆகியவற்றை நடவு செய்த 40 நாட்களுக்கு பிறகு (1.5 முதல் 25 அடி உயரத்தில் வளரும் போது) செடிகள் சாயாமல் இருக்க முட்டுக்கொடுக்க வேண்டும். தென்படும் களைகளை கைகளால் உடனடியாக அகற்ற வேண்டும். செடிகளின் ஆரம்ப வளர்ச்சி பருவத்தில் சாறு உறிஞசும் பூச்சிகளான அசுவினி, மாவுப்பூச்சி, தத்துப்பூச்சி, இலைப்பேன் ஆகியவற்றின் பாதிப்பு அதிகம் தென்படும். தலை பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் கலந்த கரைசலை செடிகளின் மீது வாரம் ஒருமுறை தெளித்து, இவற்றின் பாதிப்பை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.