தூத்துக்குடியில் உடல்நலம் பாதித்த மூத்த தொண்டருக்கு அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆறுதல்
தூத்துக்குடி, அக். 29: தூத்துக்குடியில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள திமுக மூத்த தொண்டரை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். தூத்துக்குடி மாநகராட்சி 30வது வார்டிற்குட்பட்ட டூவிபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் வேலாயுதம்(88). அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராகவும், பயண சீட்டு பரிசோதகராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். திமுகவில் 1981 முதல் உறுப்பினராக இருந்து வருகிறார். திமுக தொழிற்சங்கமான தொமுசவிலும் பணியாற்றியுள்ளார். திமுக சார்பில் மூத்த முன்னோடிகளுக்கு வழங்கப்படும் பொற்கிழியும் பெற்றுள்ளார். தற்போது வயது முதிர்வின் காரணமாகவும் கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயத்தினாலும் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், அவரது வீட்டிற்கு நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்தார். அமைச்சர் கீதாஜீவன் திமுக மூத்த தொண்டர் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்த நிகழ்வு குடும்பத்தினரை நெகிழ்ச்சி அடைய செய்தது. அப்போது அண்ணாநகர் பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்ட செயலாளர் செந்தில்குமார், வட்ட அவைத்தலைவர் ராஜ்மோகன், பிரதிநிதி சுப்பிரமணியன் மற்றும் மணி, செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.