டீக்கடைக்குள் புகுந்த அரசு விரைவு பஸ்
எட்டயபுரம், செப். 23: எட்டயபுரம் அருகே டீக்கடைக்குள் அரசு விரைவு பேருந்து புகுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு விரைவு பேருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றது. பேருந்தில் 40 பயணிகள் இருந்தனர். பேருந்தை ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த சொரிமுத்து ஓட்டினார். நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 4 மணியளவில் மதுரை -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே எம்.கோட்டூர் விலக்கு பகுதியில் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகேயுள்ள டீக்கடையில் மோதி நின்றது. அதிகாலை நேரம் என்பதாலும் கடை பூட்டி இருந்ததாலும் யாருக்கும் பெரிய பாதிப்பில்லை. டிரைவருக்கும், பேருந்தின் முன்பகுதியில் இருந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு எம்.கோட்டூர் விலக்கில் கர்ப்பிணி மனைவியை பார்க்க பைக்கில் சென்ற கணவர் கார் மோதி பலியானார். இதையடுத்து அவ்வழியாக செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த அப்பகுதியில் போலீசார் பேரிகார்டு வைத்தனர். ஆனால் பேரிகார்டு தடுப்புகளை தாண்டி டீக்கடையில் பேருந்து மோதிய சம்பவம், இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.