பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு கோவில்பட்டியில் சாலைமறியல்
கோவில்பட்டி, நவ. 19: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.56 கோடி நிவாரண தொகையை வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு தொகையை முழுமையாக விடுவிக்க வேண்டும். காட்டுப்பன்றிகள் தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அவற்றை விரட்ட முயற்சி எடுக்காத வனத்துறையை கண்டித்தும், இந்தாண்டு மழை இல்லாததால் 3 முறை விதைத்தும் அழிந்து போன பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று கோவில்பட்டியில் சாலைமறியல் போராட்டம் நடந்தது.
சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் விவசாயிகள், பயணியர் விடுதி முன்பிருந்து பிரதான சாலையில் ஊர்வலமாக சென்றனர். அவர்களை நகர பேருந்து நிலைய வாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கேயே சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 93 விவசாயிகளை டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் பயிற்சி டிஎஸ்பி சுரேஷ் மற்றும் போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் மாநில பொறுப்பாளர் சுப்புராஜ், மாவட்ட தலைவர்கள் நடராஜன், வெள்ளத்துரை, தாமோதரன், அவைத்தலைவர் வெங்கடசாமி, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், வட்ட தலைவர் வெங்கடாசலபதி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.