கோவில்பட்டி அருகே தொழிலாளியை தாக்கி பைக், பணம் பறிப்பு
கோவில்பட்டி, நவ. 11: கோவில்பட்டி அருகே பைக்கில் சென்ற தொழிலாளியை மறித்து பணம், பைக் பறித்த வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர் கோவில்பட்டி அருகேயுள்ள சிதம்பராபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் மகன் கணேஷ்குமார் (35). கூலித் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். சிதம்பராபுரம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது மற்றொரு பைக்கில் வந்து மறித்த 3 பேர் அரிவாளை காட்டி, பணம் கேட்டு மிரட்டினர். அப்போது கணேஷ்குமார் தன்னிடம் பணம் ஏதும் இல்லை என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் கணேஷ்குமாரை அரிவாளால் தாக்கியதோடு அவரிடம் இருந்த ரூ.500 மற்றும் பைக்கை பறித்து சென்றனர். இதில் காயமடைந்த கணேஷ் குமார் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த நாலாட்டின்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் மந்திதோப்பு பிள்ளையார் கோயில் மேட்டுத் தெருவை சேர்ந்த பாண்டிகுமார் மகன் சரவணப் பாண்டி (19), எட்டயபுரம் படர்ந்தபுளியைச் சேர்ந்த பாலச்சந்திரன் மகன் கனகராஜ் (22) மற்றும் 16 வயதான சிறுவன் ஆகிய 3 பேருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.