விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாடு
கோவில்பட்டி, ஆக. 6: கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வானவியல் மற்றும் வின்வெளி அறிவியல் இளைஞர் மாநாடு நடந்தது. தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் மண்டல அளவில் நடந்த இம்மாநாட்டில் தென் மாவட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் 66 மாணவர்கள் கொண்ட 33 குழுக்கள் பங்கேற்றதில் 50 மாணவர்கள் கொண்ட 25 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு வரும் 15ம் தேதி துவங்கி 17ம் தேதி வரை சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் நடைபெறும் மாநில மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். கோவில்பட்டி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் உதயன் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் கண்ணன், முதல்வர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி வரவேற்றார்.
மண்டல அளவிலான வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாட்டினை நாடார் உறவின்முறை சங்கத்தலைவர் ஆர்.எஸ். ரமேஷ் குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ரோட்டரி முன்னாள் கவர்னர் ஷேக் சலீம், மாநாட்டில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார். நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் தலைவர் பேராசிரியர் ஜான்பிரின்ஸ், செயலாளர் முத்துமுருகன், அரசு மாதிரி பள்ளி கருத்தாளர்கள் ஜெகநாத், ராஜசெல்வி, கல்லூரிப் பேராசிரியை பிரியங்கா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அரசு மாதிரி பள்ளி கருத்தாளர் ரம்யா நன்றி கூறினார்.