தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்
தூத்துக்குடி, ஆக.8: தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (9ம் தேதி) சனிக்கிழமை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஆகஸ்ட்-மாதத்திற்கான சிறப்பு முகாம் நாளை (9ம் தேதி) சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த வட்டங்களில் உள்ள குடிமைப்பொருள் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் இம்முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில், குறைகள் இருப்பின் மனு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.