மன்னார்குடி அருகே கோட்டூரில் அரசு - தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
மன்னார்குடி, டிச. 8: மன்னார்குடி அருகே கோட்டூரில் அரசு பஸ்சும், தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தாசில்தார் மனைவி உள்பட 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி நேற்று பிற்பகல் தனியார் பஸ் புறப்பட்டது. தாணிக் கோட்டகம் கிராமத்தை சேர்ந்த ஜான் கிறிஸ்டோபர்(29) பஸ்சை ஓட்டினார். அதுபோல், திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த அரசு பஸ்சை மகேந்திர மணி(38) என்பவர் ஓட்டி வந்தார்.
கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே இரண்டு பஸ்களும் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் கூத்தாநல்லூர் தனி தாசில்தார் நக்கீரனின் மனைவியும், மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி மேற்பார்வையாளராக வேலை பார்த்து வரும் தீபா(45), மன்னார்குடியை சேர்ந்த சத்யா(27) உள்பட 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்டு 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி இடையே 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து கோட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.