கட்டணமில்லா பேரூந்து சேவை வாயிலாக 51 மாதத்தில் 5.1 கோடி முறை மகளிர் பயணம்
திருவாரூர், செப்.3: தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ந் தேதி முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற அன்றே மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அன்று முதல் அவரது தலைமையிலான அரசு தற்போது வரையில் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதன்படி மகளிருக்கு அரசு நகர பேரூந்துகளில் கட்டணமில்லா பயணம், கல்லு£ரி மாணவிகளுக்கான புதுமைபெண் திட்டம், மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டம், காலை உணவு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசு, நகர பேரூந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பேரூந்து சேவை என்ற திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்லும் மகளிர்கள் மட்டுமின்றி தினகூலிகளாக வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றி வரும் பெண்களும் பயனடைந்து வருகின்றனர். இதில் குறிப்பாக மளிகை கடை, ஜவுளி கடை, மருந்து கடை உள்ளிட்ட பல்வேறு சிறு வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றி வரும் பெண்களுக்கு அவர்களின் பணிக்கு ஏற்ப மாத சம்பளம் தவிர தினபடியாக ரூ 30 முதல் 50 வரையில் வழங்கப்பட்டு வரும் நிலையில் இதில் பெரும்பாலனவர்கள் தங்களது வீடுகளிலிருந்து வர்த்தக நிறுவனங்களுக்கு பேரூந்துகளிலியே வந்து செல்லும் நிலை இருந்து வந்ததால் தற்போது பேரூந்து கட்டணம் என்பது முற்றிலுமாக இல்லாமல் இருந்து வருவதால் இந்த தினபடி தொகை முழுவதும் அவர்களது சேமிப்பிற்கும், பிற செலவுகளுக்கும் உதவி வருவதால் இவ்வாறு பணிக்கு செல்லும் பெண்கள் அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியினை தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் விவசாய கூலிகள் போன்றவர்கள் வெளியூர்களில் வசித்து வரும் தங்களது குடும்ப உறவினர்களை பார்பதற்கோ அல்லது மருத்துவமனைக்கு செல்வதற்கோ, துக்கம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கோ பேரூந்தில் பயணம் செய்யும் பட்சத்தில் கட்டணத்திற்காக தங்களது கணவரை நம்பியிருந்த காலம் மாறி தற்போது கட்டணமில்லா இந்த சேவை மூலம் பெண்கள் பலரும் தங்களது விருப்பத்திற்கேற்ப வெளியூர் சென்று வருவதால் இதற்கும் அரசுக்கு நன்றியினை தெரிவித்துள்ளனர்.
பெண்கள் மட்டுமின்றி மாற்றுதிறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் இதே போன்று கட்டணமில்லா பேரூந்து சேவை கிடைத்து வருவதால் அவர்களும் அரசை பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் நன்னிலம் என 4 அரசு போக்குவரத்து கழக கிளைகள் மூலம் மகளிர் சேவைக்காக மொத்தம் 52 பேரூந்துகள் இயங்கி வருகிறது. இந்த பேரூந்துகள் மூலம் இதுவரையில் 51 மாத காலத்தில் மொத்தம் 5.1 கோடி பேர் பயனடைந்துள்ள நிலையில் இவ்வாறு பயனடைந்துள்ள மகளிர், மாற்றுதிறனாளிகள் மற்றும் திருநங்கைகள் உட்பட அனைவரும் அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.