திருவாரூரில் மக்கள் குறைதீர் கூட்டம்
திருவாரூர், செப். 30: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 240 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் மோகனசந்திரன் தலைமை வகித்தார். இதில் பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 240 மனுக்களை அளித்தனர்.
பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மோகனசந்திரன் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வில் திருவாரூர் மாவட்ட வருவாய்துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்ட 5 பேருக்கு பணிநியமன ஆணையினை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் டி.ஆர்.ஒ கலைவாணி, சமூக பாதுகாப்புத்திட்ட தனி துணை ஆட்சியர் தையல்நாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சதீஷ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.