திருவாரூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
திருவாரூர்,நவ.28: திருவாரூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையினையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
வங்ககடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளாதால் அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுமக்கள் தாங்கள் அருந்தும் குடிநீரை காய்ச்சி வடிகட்டிய பின்னர் பருகவும், சூடான உணவுகளை மட்டுமே உண்ணவும், தேவையான மருந்து பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வீட்டில் மின்விளக்குகளை கவனமுடன் கையாளவும், உடைந்த மின்சாதன பொருட்களை உடனே மாற்றவும், வீட்டை சுத்தமாக வைத்திருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுவதுடன் மின்மாற்றிகள் மற்றும் மின் கம்பிகள், மின் பகிர்வுபெட்டிகள் அருகே செல்லவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்து இருந்தால் மின்வாரியத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும்.
இடி மின்னல் ஏற்படும்போது மின்னணு சாதனங்களை பயன்படுத்தவேண்டாம் எனவும் பச்சை மரங்களுக்கு அருகில் நிற்கவேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுவதுடன் நீர் நிலைகளின் அருகில் ஆபத்தான முறையில் செல்பி எடுத்தல் போன்றவற்றில் ஈடுபடவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் கனமழையால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையை அவசரகால உதவி எண் 1077, 04366-226623 மற்றும் வாட்ஸ்அப் எண்: 9043989192 மற்றும் 9345640279 ஆகிய எண்களுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.