திருவாரூர் நகர்மன்றத்திற்கு மாற்றுதிறனாளி உறுப்பினர் பதவியேற்பு
திருவாரூர், நவ. 26: திருவாரூர் நகர்மன்றத்திற்கு மாற்றுதிறனாளி உறுப்பினராக அரசு மூலம் தேர்வு செய்யப்பட்டவருக்கு நேற்று பதவி பிரமானம் செய்துவைக்கப்பட்டது. தமிழகத்தில் 3ம் பாலினத்தவர் என்று அழைக்கப்பட்டு வந்தவர்களுக்கு திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் என்றும், ஊனமுற்றோர் என்று அழைக்கப்பட்டு வந்தவர்களை மாற்றுதிறனாளிகள் என்றும் பெயர் சூட்டி மறைந்த முதல்வர் கருணாநிதி அழகு பார்த்தார். அவரது வழியில் தற்போதைய திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பொதுமக்களுக்கு மட்டுமின்றி விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், மாற்றுதிறனாளிகள், திருநங்கைகள் உள்ளிட்ட அனைவருக்கும் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.
இதுமட்டுமின்றி மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவரவர்க்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் அந்தந்த மாவட்டங்களில் பெறப்பட்டு தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வுகாணும் வகையில் மாவட்ட அளவில் கலெக்டர் அலுவலகத்திலும், கோட்ட அளவில் ஆர்.டி.ஓ அலுவலகங்களிலும் ஒவ்வொரு மாதமும் சிறப்பு குறைதீர் கூட்டமானது நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மாற்றுதிறனாளி பிரதிநிதி ஒருவரை மன்ற உறுப்பினராக நியமிக்கும் வகையில் அரசு மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு இதற்காக கடந்த ஜுன் மாதம் 26ந் தேதி தகுதியுடைய மாற்றுதிறனாளிகளிடமிருந்து அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி, திருவாரூர் நகராட்சி மூலம் அனுப்பி வைக்கப்பட்ட மனுக்களில் தகுதியுடைய நபராக சம்பத் என்பவர் தேர்வு செய்யப்பட்டு அவரை நகர்மன்ற உறுப்பினராக தேர்வு செய்வதற்கு அரசு மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதையடுத்து மேற்படி மாற்றுதிறனாளி உறுப்பினரான சம்பத் நகர்மன்ற உறுப்பினராக பதவியேற்கும் நிகழ்ச்சி நேற்று நகராட்சி அலுவலக கூட்டரங்களில் நடைபெற்றது. இதில், கமிஷ்னர் சுரேந்திரஷா உறுப்பினராக சம்பத்திற்கு பதவி பிரமானம் செய்துவைத்தார். பின்னர் உறுப்பினர் சம்பத் உறுதிமொழி ஏற்றுகொண்டார். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் புவனப்பிரியாசெந்தில், துணை தலைவர் அகிலாசந்திரசேகர் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.