மழை விட்டும் வடியாத நீர் திருத்துறைப்பூண்டியில் சாலை மறியல்
திருத்துறைப்பூண்டி, டிச.12: திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் எம்.எல்.ஏ. க்கள் உட்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பருவமழையால் பெய்த கனமழையினால் பாதிப்படைந்துள்ள நெற் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வலியுறுத்தியும், டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பதை கைவிட்டு, பழைய நடைமுறையை பின்பற்ற வலியுறுத்தியும் திருத்துறைப்பூண்டி நகர பேருந்து நிலையத்தில் சிபிஎம் சிபிஐ விவசாய சங்கங்களின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் சி.பி.எம் விவசாய சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சாமிநாதன், சிபிஐ விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜோசப் தலைமை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏக்கள் பழனிச்சாமி, உலகநாதன், சிபிஎம் கட்சி சார்பில் மாநில குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, ரகுராமன், நகர செயலாளர் கோபு, ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், விவசாய சங்க நகர செயலாளர் ஜெயபிரகாஷ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் வீரசேகரன், சிபிஐ சார்பில் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் வக்கீல் வையாபுரி, சிபிஜ கட்சியின்மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சந்திரராமன், ஒன்றிய செயலாளர் ஜவகர், நகர செயலாளர் கார்த்திக், மதிமுக மாவட்ட பொருளாளர் கோவி சேகர்,மாதர் சங்க மாவட்ட செயலாளர் சுஜாதா, வி.தொ.ச மாவட்ட செயலாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கலந்து கொண்டனர். சாலை மறியல் போட்டத்தில் ஈடுப்பட்ட 200க்கும் மேற்ப்பட்டவர்களை திருத்துறைப்பூண்டி போலீஸ் சார் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.
இந்த மறியலினால் திருத்துறைப்பூண்டியில் அனைத்து வழித்தடத்திலும் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதே போன்று விளக்குடி, ஆலத்தம்பாடி, பாமணி, பிச்சன் கோட்டகம் ஆகிய பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.