பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வழங்கிட வேண்டும்
திருவாரூர், டிச. 7: டிட்வா புயல் சின்னம் காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் நேற்று மாவட்ட தலைவர்கள் முருகையன் மற்றும் தம்புசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர்கள் ஜோசப் மற்றும் சேகர் மற்றும் பொறுப்பாளர்கள் சாமிநாதன், ஜெயபிரகாஷ், சுப்பிரமணியன், பவுன்ராஜ், சௌந்தர்ராசன், தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், டிட்வா புயலின் காரணமாக ஏற்பட்ட தொடர் மழையின் காரணமாக பெருமளவு சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருகிறது. கடந்த செப்டம்பரிலும் வடகிழக்கு பருவ மழை வெள்ள நீர் சூழ்ந்து குறுவை அறுவடை செய்ய வேண்டிய நிலையில் இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கியும் சம்பா, தாளடி இளம் பயிர்களும் பாதித்தன. தற்போது நீரில் மூழ்கிய சம்பா, தாளடி பயிர்கள் முற்றிலும் அழியும் நிலையில் உள்ளது. மேலும் மழை தொடரும் நிலையில் வயல்வெளிகள் அனைத்தும் கடல் போல் மழை நீர் தேங்கி உள்ளதால், மறு விதைப்பு மேற்கொள்ள வழிவகையும் இல்லை.