பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
வலங்கைமான், செப்.3: வலங்கைமானில் நடைபெற்ற அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் வட்ட பேரவை கூட்டத்தில் பணி நிரந்தரம்,காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் வலங்கைமான் வட்டப் பேரவை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பேரவைக்கு விஐயலெட்சுமி தலைமை வகித்தார், மாவட்ட துணைத்தலைவர் திரிபுரசுந்தரி கொடியினை ஏற்றினார், சிஐடியு மாவட்டச்செயலாளர் மாலதி துவக்கவுரை யாற்றினார், ஒன்றிய செயலாளர் ஜெயசித்ரா வேலை அறிக்கையையும். பொருளாளர் சூர்யா வரவு-செலவு அறிக்கையையும் வாசித்தனர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டத் தலைவர் பாலசுந்தரம், அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் சித்ரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர், மாவட்ட செயலாளர் பிரேமா புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி நிறைவுறை யாற்றினார்.
புதிய நிர்வாகிகளாக தலைவராக விஜயலெட்சுமி, செயலாராக ஜெயசித்ரா, பொருளாராக விஜயா, மாவட்ட செயற்குழு உறுப்பினராக ரெத்தினகுமாரி மற்றும் 10- பேர் கொண்ட இணை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பணி நிரந்தரம், காலமுறை ஊதியம்,ஓய்வூதியம் ரூ.9000/- வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.