திருவாரூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான சிலம்பம் போட்டிகள்
திருவாரூர், செப்.3: திருவாரூரில் முதலமைச்சர் கோப்பைக்காக மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் நூற்றுகணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர். தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருவாரூர் மாவட்ட விளையாட்டுப்பிரிவு சார்பாக பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட விளையாட்டரங்கில் கடந்த மாதம் 26ம் தேதி முதல் துவங்கி கடந்த 31ந் தேதி வரையில் 5 நாட்களுக்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்காக பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இந்நிலையில் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு 17 முதல் 25 வயதிற்குட்பட்டவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் துவங்கியுள்ள நிலையில் நேற்று சிலம்பம், வாலிபால், கால்பந்து மற்றும் இறகுபந்து ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் நுற்றுகணக்கான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினர். மேலும் இன்று (3ம் தேதி) தடகளம் மற்றும் கைபந்து (மாணவ, மாணவிகள்), வரும் 6 மற்றும் 7 தேதிகளில் திருவிக கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் (மாணவ,மாணவிகள்) ஆகிய போட்டிகளும் நடைபெறுகிறது. மேலும் 10ம் தேதி கேரம் போட்டி (மாணவ, மாணவிகள்) மாவட்ட உட்விளையாட்டு அரங்களிலும் நடைபெறுகிறது. இதேபோன்று அனைத்து பிரிவுகளுக்கும் போட்டியானது நடைபெறவுள்ள நிலையில் இந்த போட்டிகள் அனைத்தும் காலை 8 மணிக்கு துவக்கப்படும்.
மேலும் இணையதளத்தில் போட்டிகளில் கலந்து கொள்ள பதிவு செய்த வீரர்,வீரங்கனைகள் அட்டவணையில் கண்டுள்ள தேதிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக தங்களுடைய இணையதளத்தில் பதிவு செய்த நகல், கல்லூரிகளில் பயிலுவதற்கான உறுதி சான்றிதழ், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், அரசு ஊழியர்கள் அவர்களின் (நிரந்தரப்பணியாளர்) அடையாள அட்டை நகல் மற்றும் பொதுமக்கள் ஆதார் நகல் மற்றும் இருப்பிடச்சான்று ஆகியவற்றுடன் வங்கி சேமிப்பு கணக்குப் புத்தக நகலையும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் ஒப்படைத்த பின்னர் தங்கள் வருகையையும் பதிவு செய்திட வேண்டும் என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.