நவ.2ம் தேதி ராக்கெட் ஏவப்பட உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
பொன்னேரி, அக்.30: ஹரிகோட்டாவில் நவ.2ம் தேதி ராக்கெட் ஏவப்பட உள்ளதால், திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் நவம்பர் 2ம் தேதி மாலை 5.26 மணிக்கு எல்விஎம்3-எம்5 ராக்கெட் மூலம் தொலைதொடர்புக்கான சிஎம்எஸ்3 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. ராக்கெட் ஏவும் காலங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு குறிப்பிட்ட கடல் பகுதிக்குள் மீனவர்கள் மீன்பிடிக்க தொழிலுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி, நவம்பர் 2ம் தேதி பழவேற்காடு பகுதி மீனவர்கள் உட்பட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் யாரும், கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவ கூட்டுறவு சங்கங்களுக்கு, மீன் வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.