நீர்வரத்து அதிகரித்து வரும்நிலையில் புழல் ஏரியில் 1,000 கன அடி உபரிநீர் திறப்பு
புழல், அக்.29: சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே வேகமாக நிரம்பியது. ஏற்கனவே, கடந்த 15ம்தேதி முதல் புழல் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் திறப்பது நேற்று நிறுத்தப்பட்டிருந்தது. புயல் காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், மீண்டும் புழல் ஏரியிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2707 மில்லியன் கனஅடி நீர் நிரம்பியுள்ளது. 21.2 அடி ஆழம் கொண்ட புழல் ஏரியில் நீர்மட்டம் 18.49 அடியாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 556 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களுக்கு குடிநீருக்காக 184 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தற்போது, பெய்து வரும் மழையின் காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து 2000 கன அடியாக அதிகரித்து வருவதால், பாதுகாப்பு கருதி மீண்டும் புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்டு வரும் உபரி நீர் 250 கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் சுமார் 13.5 கி.மீ. கால்வாய் வழியாக சென்று எண்ணூர் கடலில் கலக்கிறது. செங்குன்றம் சாமியார் மடம், வடகரை, பாபா நகர் கிராண்டலைன், தண்டல் கழனி, புழல் திருநீலகண்ட நகர், தமிழன் நகர், காஞ்சி அருள் நகர், மேக்ரோ மார்வேல் நகர், பாலாஜி நகர், வடபெரும்பாக்கம், கொசப்பூர், மணலி, சடையங்குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே உபரிநீர் செல்வதால், உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உபரிநீர் கால்வாய் அருகில் சென்று வேடிக்கை பார்ப்பதோ, செல்பி எடுப்பது, ரீல்ஸ் பதிவிடுவது, குளிப்பது, துணி துவைப்பது, மீன்கள் பிடிப்பதோ போன்ற எந்த செயல்களிலும் ஈடுபட வேண்டாம் எனவும் மாவட்ட கலெக்டர் பிரதாப் அறிவுறுத்தியுள்ளார்.