திருநின்றவூர் நத்தமேடு ஏரி நிரம்பியதால் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்
ஆவடி, அக்.29: வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு சில நாட்களாக ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக திருநின்றவூரில் உள்ள நத்தமேடு ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதனால், கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும், ரப்பர் டியூப் பயன்படுத்தி கடைகளுக்கு சென்று குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்கி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதியில் அனைத்தும் நத்தமேடு ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், குடியிருப்பில் பெரும் பகுதி ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு அரசு பட்டா வழங்கி உள்ளது. அதில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அதிலும் தற்போது மழைநீர் புகுந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.