பூந்தமல்லி அருகே 5 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது
பூந்தமல்லி, நவ.22: பூந்தமல்லி அருகே 5 கிலோ கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பூந்தமல்லி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சுபாஷினி தலைமையில் எஸ்ஐ நாட்டாளம்மை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை சிக்னல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தபோது கஞ்சா பார்சல் சிக்கியது. இதையடுத்து, போலீசார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், சென்னை அடுத்த வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்த நாகராஜ்(29), என்பதும், வெளிமாநிலங்களில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து பூந்தமல்லி பகுதியில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிந்து நாகராஜை கைது செய்தனர். 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.