திருவள்ளூரில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்பு
திருவள்ளூர், செப்.17: திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், எஸ்.ஏ கல்லூரியும் இணைந்து நடத்திய போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பிரதாப், எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கொடியசைத்து, தொடங்கி வைத்தனர். திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், திருவேற்காடு எஸ்ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ரோட்ராக்ட் கிளப், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் ஆகியவை இணைந்து போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா தலைமை தாங்கினார். உதவி ஆணையர்(கலால்) கணேசன், பூந்தமல்லி வட்டாட்சியர் உதயன், கல்லூரி இயக்குநர் வி.சாய் சத்யவதி, முதல்வர் மாலதி செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாவட்ட கலெக்டர் பிரதாப், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்று, போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இப்பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் 250க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கி காடுவெட்டி கிராமம் வரை பேரணியாக சென்று போதைப் பொருட்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், சமூக அக்கறையை எடுத்துரைக்கும் வகையில், போதைப்பொருள் பழக்கம் விளைவிக்கும் தீங்குகள் மற்றும் ஆரோக்கியமான, போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.