ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் ‘நில் கவனி நேசி’ சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு
ஆவடி, செப்.17: ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் ‘நில் கவனி நேசி’ சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது. ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த திரைப்பட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள “நில் கவனி நேசி” எனும் விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில், விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு நிகழ்ச்சி நேற்று திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் போலீஸ் கன்வென்சன் சென்டரில் நடந்தது. ஆவடி மாநகர காவல் ஆணையாளர் சங்கர் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டார்.
இவ்விழாவில், ஆவடி மாநகர காவல் கூடுதல் ஆணையாளர் கே.பவானீஸ்வரி, திரைப்பட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், தமிழ்த்துறை பேராசிரியர் மற்றும் பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் உள்பட சுமார் 1500 கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து, விழிப்புணர்வு குறும்படமும் கல்லூரி மாணவ மாணவிகளிடையே திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சாலை பாதுகாப்பு குறித்து கடைபிடிக்க வேண்டி விதிமுறைகள் குறித்த மாணவர்களின் நடன கலை நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, போக்குவரத்து விதிகள் சம்மந்தமாக வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற 10 மாணவ மாணவிகளுக்கு தலா ரூ.1000 பரிசுத்தொகையை ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் வழங்கினார்.
விழாவின் ஒருபகுதியாக ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ரீல்ஸ்களை தாயர் செய்து நேற்று முதல் 05.10.2025 வரை பெயர், தொடர்பு எண், சமூக வளையதள முகவரி ஆகியவற்றை ஆவடி போக்குவரத்து பிளானிங் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதில் சிறந்த விழிப்புணர்வு ரீல்ஸ் தேர்வு செய்து முதல் பரிசாக ரூ.20,000, இரண்டாம் பரிசு ரூ.15,000, மூன்றாம் பரிசு ரூ.10,000 மற்றும் சிறப்பு பரிசாக 20 போட்டியாளர்களுக்கு தலா ரூ.1000, மற்றும் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9445825100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.