மின்சார வயர் உரசி லாரி தீ விபத்து ரூ.5 லட்சம் டயப்பர்கள் எரிந்து நாசம்
பூந்தமல்லி, நவ.13: திருவேற்காட்டில் மின்சார வயர் உரசி கன்டெய்னர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான டயப்பர்கள் எரிந்து நாசம் நாசமாகின. ஹரியானா மாநிலத்தில் இருந்து குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் டயப்பர்கள் ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று திருவேற்காடு நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த கண்டெய்னர் லாரியை டிரைவர் சல்மான் என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில், திருவேற்காடு அடுத்த வட நூம்பல் பகுதியில் உள்ள மருத்துவ குடோனில் பொருட்களை இறக்குவதற்காக நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தபோது கன்டெய்னர் லாரியில் இருந்து புகை கிளம்பியது.
இதையடுத்து, கன்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி டிரைவர் பார்த்தபோது லாரி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இது குறித்து பூந்தமல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு துறையினர் கன்டெய்னர் லாரியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதில், கன்டெய்னர் லாரிக்குள் இருந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான டயப்பர்கள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தபோது மின்சார வயர் உரசியதில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் மேலும் வேறு காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.