பிறந்து ஒரு வாரத்தில் ஆண் குழந்தை மரணம்: தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத் திணறல் காரணமா?
ஆவடி, அக்.12: பிறந்து ஒரு வாரத்தில் பச்சிளம் குழந்தை உயிரிழந்ததையடுத்து தாய்ப்பால் கொடுத்தபோது ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆவடியை அடுத்த பட்டாபிராம் ஆயில்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (30). இவரது மனைவி பிரைசியா (28). இவர்களுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்கு வந்த குழந்தை சிறிது நேரத்தில் அசைவின்றி இருந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக குழந்தையை ஆவடி அரசு மருத்துமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தபோது, காரில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஆவடி அரசு மருத்துவமனையில் இருந்து உடலை கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக குழந்தையின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.