வருண பகவான் கருணையால் கனமழை சரவண பொய்கை குளத்தில் வேகமாக உயரும் நீர்மட்டம்: கோயில் நிர்வாகம், பக்தர்கள் மகிழ்ச்சி
திருத்தணி, ஆக. 12: திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சரவண பொய்கை குளத்தில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோயிலில் வரும் வியாழக்கிழமை அஸ்வினியுடன் ஆடிக்கிருத்திகை விழா தொடங்கி 5 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. சனிக்கிழமை ஆடிக்கிருத்திகையொட்டி 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் திருத்தணி முருகன் கோயிலில் குவிந்து காவடிகள் செலுத்தி சாமி தரிசனம் செய்ய உள்ளனர். அன்று மாலை மலை அடிவாரத்தில் சரவண பொய்கை திருக்குளத்தில் முதல் நாள் தெப்பத் திருவிழா தொடங்கி, தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ளது. முருகப்பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி தெப்பக் குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கடந்த சில ஆண்டுகளாக தெப்ப குளம் தூர்வாரி சீரமைக்காததால், தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வந்த நிலையில் பக்தர்கள் குளிக்க முடியாமல் அவதி அடைந்தனர்.
திருக்கோயில் பெரும் முயற்சியால் உபயதாரர்கள் உதவியுடன் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர்வாரி சீரமைக்கப்பட்டது. டேங்குகள் மூலம் குளத்தில் தண்ணீர் நிரப்பினாலும் 4 படிகள் வரை மட்டுமே தண்ணீர் நிரம்பியிருந்தது. இதனால் தெப்பம், குளத்தை சுற்றி வரும்போது பாரம் அதிகரித்தால், தரைதட்டும் என்ற அச்சம் நிலவியது. குளத்தில் தண்ணீர் அளவு உயர வருண பகவான் கருணை வைக்க வேண்டும் என்று முருக பக்தர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருத்தணி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் முருகன் கோயில் மலையிலிருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சரவண பொய்கை திருக்குளம் வேகமாக நிரம்பி வருகிறது. நேற்றும் மழை பெய்தது. தெப்பத் திருவிழாவிற்கு 4 நாட்கள் உள்ளதால் குளம் மேலும் நிரம்பி தடையின்றி தெப்பத்தில் முருகப் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளதால், முருக பக்தர்கள் மற்றும் திருக்கோயில் நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.