பூண்டி நீர்த்ேதக்கத்திலிருந்து 1000 கன அடியாக குறைத்து உபரி நீர் வெளியேற்றம்: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 300 கன அடி உபரி நீர் திறப்பு
திருவள்ளூர், நவ.11: பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 2000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது 1000 கன அடியாக குறைத்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்தேக்கங்களும் வேகமாக நிரம்பி வருகிறது. அதன்படி நேற்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் 35 அடி மொத்த உயரத்தில் 33.63 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2708 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 1030 கன அடி மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 47 கன அடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 2000 கன அடியில் இருந்து தற்போது 1000 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 400 கன அடி நீர் வீதம் அனுப்பப்பட்டு வந்தது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியின் 24 அடி மொத்த உயரத்தில் 22.43 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 3230 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 273 கன அடியாகவும், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 165 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் ஏரியிலிருந்து வினாடிக்கு 300 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சோழவரம் ஏரியின் 18.86 அடி மொத்த உயரத்தில் 16.78 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 791 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 27 கன அடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரியின் 36.61 அடி மொத்த உயரத்தில் 34.93 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 442 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து இல்லை சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 2 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
10033 மில்லியன் கன அடி நீர் இருப்பு
5 ஏரிகளின் மொத்தக் கொள்ளளவான 11757 மில்லியன் கன அடியில் தற்போது 10033 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக கொசஸ்தலை ஆறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.