சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றும் பெண் குழந்தைகள் மாநில அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூர், செப்.11: பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24ல் மாநில அரசின் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெற 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தை வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும். மேலும், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல் மற்றும் வேறு ஏதாவது வகையில் சாதித்திருத்தல் வேண்டும்.
மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் சிறந்து விளங்கும் ஒரு பெண் குழந்தை தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு பாராட்டு பத்திரம். ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்பட்டு வருகிறது. மாநில அளவிலான தேர்வுக் குழு மூலம் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை கூர்ந்தாய்ந்து விருதினை பெற உரிய நபர் தேர்ந்தெடுக்கப்படுவர். விருதினை பெற உரிய முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், மாவட்ட திட்ட அலுவலர் மற்றும் காவல் துறை மற்றும் குழந்தைகளுக்காக பணிபுரியும் சிறந்த தொண்டு நிறுவனங்கள் ஆகியோரிடம் விபரமறிந்து பரிந்துரைக்கலாம்.
இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் சம்மந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு, கையேடாக தயார் செய்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் அனுப்பிட வேண்டும் என கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.