இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு மேம்பாலத்தில் விபத்து அதிகரிப்பு: இருபுறமும் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை
ஊத்துக்கோட்டை, செப்.10: தாமரைப்பாக்கம் அணைக்கட்டு மேம்பாலம் இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்து அதிகரித்துள்ளது. இதனால் மேம்பாலத்தின் இருபுறமும் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் இருந்தது. இந்த, பாலத்தில் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து தடைபடும். மேலும் தாமரைப்பாக்கத்தைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், 25 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டுதான் திருவள்ளூர், கும்மிடிபூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்வார்கள்.
இதனால், புதிய பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள், அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி, கடந்த 25 வருடங்களுக்கு முன்பு தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த, பாலத்தின் வழியாக பெரியபாளையத்தில் இருந்து ஆவடி, திருநின்றாவூர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு தினதோறும் நூற்றுக்கணக்கில் வாகனங்கள் சென்று வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி போன்ற பகுதிகளிலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு கனரக வாகனங்களும் வந்து செல்கிறது. மேலும், தாமரைப்பாக்கம் மற்றும் அதைச்சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்களும், இந்த பாலத்தை பயன்படுத்தி கும்மிடிபூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை போன்ற பகுதிகளுக்குச் செல்வார்கள்.
இந்நிலையில், மிக முக்கியம் வாய்ந்த இந்த பாலத்தின் இருபுறங்களிலும் மின்விளக்குகள் இல்லை. இதனால், இரவு நேரத்தில் பெரும் விபத்துகள் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே, விபத்துகளை தவிர்க்க பாலத்தின் இருபுறமும் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், தாமரைப்பாக்கம் பாலத்தின் வழியாக ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி போன்ற பகுதிகளிலிருந்து தற்போது கனரக வாகனங்கள் அதிகளவில் மின்னல் வேகத்தில் ஆந்திர பகுதிகளுக்குச் செல்கிறது.
மேலும், தாமரைப்பாக்கம் அருகில் உள்ள புன்னப்பாக்கம், பாகல்மேடு, வெங்கல் போன்ற 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சிறுகுறு விவசாயிகள் பூக்களை பறித்துக்கொண்டு சென்னை கோயம்பேட்டிற்கு எடுத்துச்செல்ல இந்த பாலத்தின்வழியாகதான், தாமரைப்பாக்கம் கூட்டுசாலைக்கு இரவு நேரத்தில் அச்சத்துடன் செல்கின்றனர். மின்விளக்குகள் இல்லாததால் இருளில் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது எதிரே வரும் கனரக வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. எனவே, தாமரைப்பாக்கம் மேம்பாலத்தின் இருபுறமும் புதிதாக மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என கூறினர்.