பூண்டியில் 500 கன அடி வெளியேற்றம்
திருவள்ளூர், டிச.4: வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. குறிப்பாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்தேக்கங்களும் வேகமாக நிரம்பியது. இந்நிலையில், டிட்வா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்ததை அடுத்து, அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, நேற்று இரவு 8 மணி நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் 35 அடி மொத்த உயரத்தில் 34.26 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2905 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்த்தேக்கத்திற்கு மழைநீர் மற்றும் வரத்து கால்வாய் மூலம் 2120 கன அடி வந்து கொண்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக இணைப்பு கால்வாய் வழியாக, வினாடிக்கு 500 கன அடியும், பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 17 கன அடியும் நீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் கொசஸ்தலை ஆற்றில் வினாடிக்கு 500 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் 24 அடி மொத்த உயரத்தில் 21.16 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 3161 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு, மழைநீர் வரத்து வினாடிக்கு 1050 கன அடியும், இணைப்புக் கால்வாய் வழியாக வினாடிக்கு 400 கன அடியும் வந்து கொண்டுள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 165 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், வினாடிக்கு 200 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சோழவரம் ஏரியின் 18.86 அடி மொத்த உயரத்தில் 14.55 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 647 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1340 கன அடி உள்ளது. மேலும், ஏரியிலிருந்து வினாடிக்கு 250 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கண்ணன்கோட்டை ஏரியின் 36.61 அடி மொத்த உயரத்தில் 35.10 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 449 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 125 கன அடியாக உள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 2 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11757 மில்லியன் கன அடியில் தற்போது 10376 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.