திருமணமாகாத விரக்தியில் கடிதம் எழுதி வைத்துவிட்டு நில அளவையர் தற்கொலை: தண்டவாளத்தில் உடல் மீட்பு
திருவள்ளூர், ஜூலை 31: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், புதுமாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ராவணன் (35). இவர் திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவையாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே ராவணன் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்தனர். ரயிலில் அடிபட்டு படுகாயம் அடைந்து ராவணன் உயிரிழந்தாரா, ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா ? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், திருமணம் ஆகாத மன உளைச்சலில் இருந்த நில அளவையாளர் ராவணன் ஏற்கனவே 5 முறை தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. திருமணமாகாத விரக்தியில்தான் தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரை மாய்த்துக் கொண்டார். மேலும் தன்னுடைய இறப்பு குறித்து ஏற்கனவே கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார். அதில், ‘நான் இறந்து போனால் பிரேத பரிசோதனை செய்து நேரடியாக சுடுகாட்டிற்கு சடலத்தை கொண்டு செல்ல வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தை தன்னுடைய பேண்ட் பையில் அவர் வைத்திருந்தார்.