பூண்டி நீர்த்தேக்க அணையை சுற்றுலாத்தலமாக மாற்ற ரூ.3.60 கோடியில் உணவக கட்டிடம்: முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்
திருவள்ளூர், ஆக. 2: பூண்டி நீர்த்தேக்க அணையை சுற்றுலாத்தலமாக மாற்ற ரூ.3.60 கோடியில் அமைக்கப்பட்ட உணவக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சென்னை பெருநகர் மாநகராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்க அணையை சுற்றுலாத்தலமாக மாற்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சுற்றுலாத்துறை சார்பாக ரூ.3.60 கோடி ஒதுக்கீடு செய்தார். அதன்படி, திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூண்டி ஒன்றியம், சதுரங்கப்பேட்டை ஊராட்சியில் சுற்றுலாத்துறை சார்பாக ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்க அணையை சுற்றுலாத்தலமாக மாற்ற ஏதுவாக அமைக்கப்பட்ட உணவக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பிரதாப், திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் உணவக கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கட்ராமன், சுற்றுலா அலுவலர்(பொ) இளமுருகன், உதவி சுற்றுலா அலுவலர் ஜெய சாய்ஜி, திமுக ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம், ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் பா.சிட்டிபாபு, முன்னாள் நகர மன்ற தலைவர் பொன் பாண்டியன், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் நேதாஜி, மோதிலால், ராஜாசிங், காஞ்சிப்பாடி சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.