அரசு பேருந்து படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவனை கண்டித்த நடத்துநர் மீது தாக்குதல்
திருத்தணி, ஆக. 2: அரசு பேருந்தில் படிக்கட்டுகளில் பயணம் செய்த பள்ளி மாணவன் தட்டி கேட்ட நடத்துனரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருத்தணி பேருந்து நிலையத்திலிருந்து நேற்று மாலை 5.45 மணியளவில் வீரமங்கலம் செல்லும் அரசு பேருந்து தடம் எண்:65ல் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயணம் செய்தனர். அரசுப் பேருந்து தற்காலிக ஓட்டுநராக ராஜீவ்காந்தி, தற்காலிக நடத்துனராக அஜித் ஆகியோர் பணியில் இருந்தனர். பயணிகள் கூட்டம் மிதமாக இருந்தாலும், பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்து படியில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர். இதனைக் கண்ட நடத்துநர் 2 மாணவர்களை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, மாணவர்களில் ஒருவர் நடத்துநரை அஜித்தை மிரட்டி தாக்கிவிட்டு தப்பினார். இதையடுத்து, முருகூர் பகுதியில் பேருந்து நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க பேருந்தை இயக்குமாறு தெரிவித்தனர். இதையடுத்து பேருந்து அரைமணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், என்று போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.