திருவள்ளூர் மோவூர் கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் திறப்பு
திருவள்ளுர், ஜூலை 25: திருவள்ளூர் கலெக்டர் மு.பிரதாப், தரமான ஆவின் கால்நடை தீவனத்தை கறவை மாடுகளுக்கு வழங்கி, பால் கொள்முதல் செய்து, அதிக விலையினை பெற சங்க உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார். இதன்மூலம் அனைத்து பால் உற்பத்தியாளர்களும் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கி பயனடையுமாறும், கால்நடைகளுக்கு சத்தான தீவனம் வழங்குமாறும் அறிவுறுத்தினார்.
அந்த வகையில், TLR 369 மோவூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த, கிராமம் FOCUS BLOCKல் உள்ள நிலையில், சங்கத்திற்கு இலவசமாக ரூ.15,220 மதிப்பிலான பால் கொள்முதல் உபகரணங்கள் மற்றும் ரூ.1.59 லட்சம் மதிப்பிலான பால் பகுப்பாய்வு கருவி ஆகியவை வழங்கப்பட்டது. மேலும், உறுப்பினர்கள் அனைவருக்கும் 50 கிலோ கால்நடை தீவனம் மற்றும் 1 கிலோ தாது உப்புக் கலவை வழங்கப்பட்டது.
மேலும் கால்நடை சிகிச்சை முகாம் மற்றும் சினை பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு, சங்க உறுப்பினர்களுக்கு தேவையான கால்நடை மருந்துகள் வழங்கப்பட்டது. கால்நடை மருத்துவ முகாமில் 427 கால்நடைகளுக்கு கோமேரி தடுப்பூசி குடற்புழு நீக்கம், கருவி மூலம் சினை பரிசோதனை, சினை பிடிகாத கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் டில்லிபாபு, ஆவின் பொதுமேலாளர் ராஜ்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ஜெயந்தி, பால்வள துணை பதிவாளர் கணேசன், உதவி பொது மேலாளர்கள், துணை இயக்குநர்கள், கால்நடை மருத்துவர்கள், கூட்டுறவு சார்பதிவாளர், முதுநிலை ஆய்வாளர்கள், விரிவாக்க அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.