மயிலாடும்பாறை அருகே சேதமடைந்து கிடக்கும் தொகுப்பு வீடுகள்
வருசநாடு, அக். 31: மயிலாடும்பாறை அருகே உப்புத்துரை, தாழையூத்து உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியின மக்களுக்கு 60 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டது. இதனையடுத்து மலைகளில் வசித்து வந்த பழங்குடியினர் அனைவரும் தொகுப்பு வீடுகளில் குடியேறினர். இந்நிலையில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்ட பின்பு அதில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் பெரும்பாலான தொகுப்பு வீடுகளில் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. எனவே மழை பெய்யும் நேரங்களில் மழை நீர் மேற்கூரை வழியாக வீட்டிற்குள் கசிந்து வருகிறது. மேலும் அவ்வபோது வீட்டின் மேற்கூரையில் இருந்து சிமெண்டு பகுதி உடைந்து விழுந்து வருகிறது. வீடுகளை சீரமைக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வீடு இடிந்து விடும் என்ற அச்சத்தில் உப்புத்துரை கிராமத்தை சேர்ந்த பழங்குடி இன மக்கள் புலம்பி வருகின்றனர்.
மேலும் பழங்குடியின தாழையூத்து பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘எங்கள் மக்கள் சிலர் குடும்பத்துடன் மீண்டும் மலைகளில் குடியேறிவிட்டனர். வீடுகள் சேதம் மற்றும் குடிநீர், சுற்றுசுவர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மீதமுள்ள பழங்குடியினரும் மலைகளுக்கு குடியேறும் மனநிலையில் உள்ளனர். எனவே கடமலைக்குண்டு, உப்புத்துரை, தாழையூத்து உள்ளிட்ட கிராமங்களில் பழங்குடியினருக்கு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை முறையாக சீரமைக்க வேண்டும். மேலும் பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை வசதகிள் செய்து தர மாவட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்’’ என்றனர்.
