கடமலைக்குண்டு கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
வருசநாடு, ஆக.14: கடமலைக்குண்டு கிராமத்தில் தேனி பிரதான சாலையின் இருபுறமும் ஏராளமான தனியார் கடைகள் அமைந்துள்ளது. இதில் பெரும்பாலான கடைகள் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனால் மற்ற பகுதிகளை விட கடமலைக்குண்டு கிராமத்தில் மற்றும் தேனி சாலையின் அளவு குறுகலாக காணப்படுகிறது. மேலும் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் டூவீலர்களை சாலையிலேயே நிறுத்தி வைக்கின்றனர்.
இதனால் கடமலைக்குண்டுவில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரங்களில் நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று விடுகிறது. சில நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் சிக்கிக் கொள்கிறது. கடமலைக்குண்டு கிராமத்தில் தேனி சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கடமலைக்குண்டுவில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கடமலைக்குண்டு பகுதி பொதுமக்கள் கூறுகையில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, தங்கம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் ஆக்கிரமிப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல்கள் அதிகரித்து வருகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண தேனி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.